தாய்நாட்டுக்கு பணம் அனுப்பும் இந்தியர்கள்: மஹாராஷ்டிரா முதலிடம் கேரளா 2-ம் இடம்; தமிழ்நாட்டின் நிலை என்ன..?


புதுடில்லி: வெளிநாடுகளில் வேலை பார்த்து தாயகத்துக்கு பணம் அனுப்பும் இந்தியர்களில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். 

கேரளாவைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் இடத்தையும், தமிழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2010-11ஆம் நிதி ஆண்டில் வெளிநாடுகளில் பணிபுரிந்த இந்தியர்கள் தாயகத்துக்கு அனுப்பிய பணத்தின் மதிப்பு 4.63 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 

இது 2023-24ஆம் நிதி ஆண்டில் கணிசமாக உயர்ந்து 9.88 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மாநிலங்கள் வாரியாக பார்க்கும்போது, 2023-24ஆம் நிதி ஆண்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 20.5 சதவீத பணத்தை அனுப்பியுள்ளனர். 

19.7 சதவீத பணவரவுடன் கேரளா இரண்டாம் இடத்திலும், 10.4 சதவீத பணவரவுடன் தமிழகம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. தெலுங்கானா 8.1 சதவீதத்துடன் நான்காவது இடத்தையும், கர்நாடகா 7.7 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளன. 

குறிப்பாக, கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை, 2020-21ஆம் நிதி ஆண்டில் கோவிட் தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலை பார்த்த பலர் தாயகம் திரும்பியதால், வெளிநாட்டுப் பணவரவு 10.2 சதவீதமாக குறைந்தது. 

ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் நிலைமை சீரடைந்ததால், 2023-24ஆம் நிதி ஆண்டில் கேரளாவின் வெளிநாட்டுப் பணவரவு 19.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடுகள் வாரியாக பார்க்கும்போது, இந்தியாவுக்கு வரும் மொத்த வெளிநாட்டு பணவரவில் அமெரிக்காவில் இருந்து 27.7 சதவீதமும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 19.2 சதவீதமும், பிரிட்டனில் இருந்து 10.8 சதவீதமும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த புள்ளி விவரங்கள் வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றனர் என்பதை காட்டுகிறது. 

குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களின் பொருளாதாரத்திற்கு வெளிநாட்டுப் பணவரவு கணிசமான பங்களிப்பை அளிக்கிறது.